இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டிற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் கட்டத்திற்கு அப்பால் சென்று, நீண்டகால வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘வளர்ச்சி, பின்னடைவு மற்றும் திறந்த தன்மைக்கான சீர்திருத்தங்கள்’ (Reforms for Growth, Resilience, and Openness) திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.
இந்த நிதியின் மூலம் நாட்டின் தனியார் துறையை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் கீழ் பல முக்கிய துறைகளின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளது.
வர்த்தகத் தடைகளை நீக்குதல் மற்றும் முதலீட்டுச் சூழலை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றுதல், நிதித்துறையை வலுப்படுத்துதல், அரச நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் செயல்திறனை அதிகரித்தல், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், மின்சாரத் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தி குறைந்த செலவில் தரம்மிக்க சேவையை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
உலக வங்கி தற்போது இலங்கையின் கல்வி, சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 13 திட்டங்களுக்காக 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான தீவிர பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
