42ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பை மையமாகக் கொண்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு அங்கமாக, மத நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில், இஸ்லாமிய வழிகாட்டல் மற்றும் நல்லிணக்க மையத்தினால் (Center for Islamic Studies Harmony Center) ஒருங்கிணைக்கப்பட்ட “Welcome to Our Mosque” எனும் திறந்த பள்ளிவாசல் நிகழ்ச்சித்திட்டம் (24) நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதான ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கே.எஸ்.என். அபேசிங்க, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலஃபர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் நீர்கொழும்பு மாநகர முதல்வர் உட்பட பல முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், காவல்துறை அதிகாரிகள், விமானப்படையின் முன்னாள் கமாண்டர் ஷிஃபா மற்றும் உயர் விமானப்படை அதிகாரிகளும் இதில் பங்கெடுத்தனர்.
அத்துடன், மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பார்வையாளர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
பள்ளிவாசலில் நடைபெறும் மத வழிபாடுகள், முஸ்லிம்களின் கலாச்சாரம், ஆடை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை மேம்படுத்தும் உயரிய நோக்கில் இந்த அமைப்பினால் நீண்டகாலமாக இந்நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது பள்ளிவாசல் வழிகாட்டல் விஜயம், கேள்வி-பதில் அங்கம், சுவரொட்டிப் பிரசாரங்கள், அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்கள் கண்காட்சி, பெண்களுக்கான கலாச்சார அம்சமான ‘மருதாணி இடும் பகுதி’ என்பன அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், வருகை தந்த விருந்தினர்களின் பெயர்களை இலவசமாக அரபு எழுத்தணி (Arabic Calligraphy) எழுத்துருவில் எழுதிக் கொடுத்தல் மற்றும் பாரம்பரிய முஸ்லிம் உணவுகள் வழங்குதல் ஆகிய சிறப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றன.

