இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தியாகிகளின் வரலாற்றை நினைவுகூரவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,
எழில்மிகு இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது நம் அனைவரின் உள்ளங்களிலும் பெருமகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது.
உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா, தெற்கிலும் வடக்கிலும் பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகள், இனங்கள் மற்றும் பலதரப்பட்ட பருவ காலங்களைக் கொண்டு திகழும் இந்தத் தேசத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டைப் பேணிக் காக்க அனைவரும் பாடுபடுகிறோம்.
காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மௌலானா அபுல் கலாம் ஆசாத், பகத் சிங் போன்ற தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் இந்நாளில் போற்றி நினைவில் நிறுத்துவோம்.
இவர்களுக்கு முன்பாகவே களத்தில் நின்று போராடிய இரண்டாம் பகதூர் ஷா, ஜான்சி ராணி லெட்சுமி பாய், சிராஜ் உத்-தௌலா, வேலு நாச்சியார், திப்பு சுல்தான், பூலித்தேவன், மருதநாயகம், தீரன் சின்னமலை, குயிலி, வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட மாபெரும் போராளிகளின் தியாகங்களையும் கொண்டாடுவோம்.
சுதந்திரத்தின் முதன்மை நோக்கங்களான கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி உள்ளிட்ட ஜனநாயக தத்துவங்களைப் பாதுகாப்போம் என மு.தமிமுன் அன்சாரி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
