கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தரம் ஒன்றுக்கான தமிழ் செயற்பாட்டு புத்தகங்கள் உட்பட 19892 பாட புத்தகங்களை உரிய முறையில் விநியோக மத்திய நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்காது அவற்றை காணாமல் ஆக்கச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் சேவையிலுள்ள தயாரிப்பு மற்றும் விநியோக ஆணையாளரினால் கடந்த 12ம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதியப்பட்டது.
கிழக்கு மாகாணத்திற்கென தரம் ஒன்றின் 3ம் தவணைக்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் பாட புத்தகங்கள் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்கென பியகம பிரதேசத்திலுள்ள போக்குவரத்து நிறுவனமொன்றுடன் கடந்த மே மாதம் 04ம் திகதி ஒப்பந்தமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் அதற்கமைய குறித்த மாகாணத்திலுள்ள 12 மத்திய நிலையங்களுக்கு உரிய முறையில் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லையென தெரியவந்தது.
உரிய முறைப்பாட்டிற்கமைய தலங்கம பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இதற்கமைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பாட புத்தகங்களை கொண்டு சென்ற போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான லொறியின் சாரதியினால் (முதல் சந்தேக நபர்) அலவ்வ, பாதயாய, மாவத்த கீழ் பகுதி, கெப்பிட்டிவலாயன பகுதிகளில் பழைய பொருட்களை சேகரிக்கும் நபர் ஒருவருக்கு புத்தகங்கள் மற்றும் ஒரு கிலோ எடைகொண்ட கடதாசிகளை 25000 ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாட புத்தகங்களை 25000 ரூபாவிற்கும் கொள்வனவு செய்த நபர் (இரண்டாவது சந்தேக நபர்) அவற்றை அதிக விலைக்கு மற்றுமொருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
குளியாப்பிட்டிய, நாரம்மல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பின்னர் நாரம்மல பகுதியைச் சேர்ந்த சம்பவத்தின் 3வது சந்தேக நபரினால் குறித்த பாட புத்தகங்கள் மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அவை விற்கப்பட்டுள்ளன. அவ்வாறு அவற்றை கொள்வனவு செய்த சம்பவத்தின் நான்காவது சந்தேக நபர் குறித்த பாட புத்தகங்கள் நீர்கொழும்பு, வத்தளை பகுதியைச் சேர்ந்த நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
