நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், 6 ஆசிரியர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதேச செயலக பெண் அதிகாரிகள் இருவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் (Skype) தொழில்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சந்தேகநபரான பெண் அதிகாரிகள், குறித்த 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை வைப்பு செய்துள்ளமை தெரியவந்துள்ளதால், அவர்களின் கணக்குகளை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் ஆசிரியர்களின் சேவையைத் இடைநிறுத்தியுள்ளார்.
சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரியின் கணக்கிலும் பெருந்தொகை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
