2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் நாடு 512.547 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு (Ways and Means) தொடர்பான குழுவினால் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயல்பாடுகள் மற்றும் வருவாய் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் போது இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன.
வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட மொத்த வரி வருவாயில், மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மிகப்பெரிய பங்களிப்பை (ரூ. 386.726 பில்லியன்) அளித்துள்ளது.
1,000 சிசி-க்கும் குறைவான என்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் கார்கள் அதிக வருவாய் ஈட்டும் பிரிவாகத் திகழ்ந்தன.
இவை சுங்க வரி வருவாயில் ரூ. 137.4 பில்லியனைப் பங்களித்தன. இது மொத்த சுங்க வரி வருவாயில் 9.96 சதவீதமாகும்.
இதற்கிடையில், 2026 ஜூன் 30, வரையிலான காலப்பகுதியில் 1.061 டிரில்லியன் ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை சுங்கத் திணைக்களம் 1.379 டிரில்லியன் ரூபாய் மொத்த வருவாயைப் பதிவு செய்துள்ளது; இது இலக்கு வைக்கப்பட்ட வருவாயில் 130 சதவீதமாகும்.
ஆண்டு முழுவதும் சுங்க வருவாய் மாதாந்திர இலக்குகளைத் தாண்டியது என்றும், 2025-ஆம் ஆண்டின் தொடர்புடைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருவாய் பதிவு செய்யப்பட்டது என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை ஆய்வு செய்தல், சுங்கச் செயல்பாடுகளை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் உள்ள சவால்கள் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அக்குழு விவாதித்தது.
