சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வும் இஃப்தார் விருந்தும் நேற்று (பெப்ரவரி 20) கொழும்பு ஐ.டி.சி ரத்னதீபா (ITC Ratnadeepa) ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக இலங்கையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி (Khalid bin Hamoud Al-Kahtani) தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இதில் பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்திய தூதுவர் அல்-கஹ்தானி, சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, “இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே 51 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் இருதரப்பு உறவு மிகவும் வலுவானது. வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் கலாசார ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, சவூதி ஸ்தாபக தினத்தை நினைவுகூரும் வகையில் அதிதிகளால் கேக் வெட்டப்பட்டது.
தூதுவர் காலித் அல்கஹ்தானியுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் கலாநிதி ஜி.எல்.பீரிஸ், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி, ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ஷேக் ரிஸ்வி முப்தி, அதன் செயலாளர் அர்கம் நூராமித் உட்பட பல்வேறு தளங்களைச் சேர்ந்த தலைவர்களும் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இது சவூதி அரேபியாவினுடைய ஸ்தாபக தினத்திற்கு அப்பால் ரமழானில் சகல இனங்களைச் சேர்ந்த தலைவர்களையும் ஓர் இஃப்தார் நிகழ்விலே ஒன்றுகூடி தங்களுடைய அன்பையும் நெருக்கத்தையும் பரிமாறிக்கொண்ட மற்றொரு நிகழ்வாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவும் அமைந்தது.
சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் வரலாறு:
சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 22 அன்று நினைவுபடுத்தப்படுகின்றது இது 1727-ல் இமாம் முகமது பின் சவுத் அவர்களால் முதல் சவூதி அரசை நிறுவியதை நினைவுகூருகிறது.
இது சவூதி தேசத்தின் அடித்தளம் மற்றும் மூன்று சவூதி States-களின் முதல் ஸ்டேட் ஆகும். இந்த நாள், நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தேசத்தின் வளர்ச்சியை நினைவுகூரும் முக்கிய நாளாகும்.
முதலாம் சவூதி அரசு 1818 இல் வீழ்ச்சியடைந்தது, ஆனால் துருக்கிய படைகளுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு, இமாம் துர்கி பின் அப்துல்லா பின் சவுத் அவர்கள் 1824 இல் இரண்டாம் சவூதி அரசை நிறுவினார். இது தற்கால சவூதி அரேபியாவின் மற்றொரு முக்கியப் படியாகும்.
இரண்டாம் சவூதி அரசு 1891 வரை நீடித்தது, பின்னர் அது ராஷித் வம்சத்தால் வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு, சவூதி தேசத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்தன.
இறுதியாக, மன்னர் அப்துல் அஜிஸ் பின் சவுத் அவர்கள் 1902 இல் ரியாதைக் கைப்பற்றி, நவீன சவூதி அரேபியாவிற்கு அடித்தளமிட்டார். இதுதான் சவூதி தேச உருவாக்கத்தின் முழுமையான வரலாறாகும்
மன்னர் அப்துல் அஜிஸ் பின் சவுத் அவர்களின் காலம், நவீன சவூதி அரேபியாவின் மிக முக்கியமான காலகட்டம். அவர் நாட்டை ஒருங்கிணைத்து, அதை ஒரு நவீன நாடாக மாற்ற பாடுபட்டார். சவூதி அரேபியாவின் தேசிய தினமாக நினைவுபடுத்தப்படும் செப்டம்பர் 23, அன்றுதான் அவர் சவூதி அரேபியாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

