எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தினால் மற்றும் அதன் ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை ஆரம்பகட்ட பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எவன்கார்ட் நிறுவனம் நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த கடல்சார் பாதுகாப்பு சேவைகளை, இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார். எவன்கார்ட் நிறுவனத்தின் இந்தச் செயற்பாடுகளினால் நாட்டிற்குப் பாரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு அந்தப் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைத்தார்.
இதன் விளைவாக, இதுவரை தனிப்பட்ட நிறுவனமொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த பாரிய டொலர் வருமானம், தற்போது முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறுகிறது. புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் இந்த வணிகத்தை எவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து நீக்கி மீண்டும் கடற்படையிடம் ஒப்படைத்தது.
இதன்படி, சுதந்திரமான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வெறும் நான்கு மாத காலப்பகுதிக்குள் 598,250 அமெரிக்க டொலர்களை உழைக்க இலங்கை கடற்படைக்கு முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
