புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஈதுல் பித்ர் திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம் மற்றும் அருட்கொடைகள் நிறைந்ததாக மீண்டும் மீண்டும் வழங்கி அருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.”
இந்த புனிதமான தருணத்தில், சவூதி அரேபியாவின் தலைமைத்துவத்திற்கும் அவர் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்,
மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊத் (இரு புனிதஸ்தலங்களின் காவலர்) முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊத் (பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர்) மற்றும் சவூதி அரேபிய மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்திய தூதுவர், இலங்கை நாடு தொடர்ந்தும் முன்னேற்றமும் செழிப்பும் அடைய வேண்டும் என வாழ்த்தினார். அத்துடன், உலகம் முழுவதும் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும், அமைதியும் நிலவ வேண்டுமெனவும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த பெருநாள் மக்களிடையே சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகிய விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அமையட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரதும் நற்செயல்களை அங்கீகரிக்க வேண்டும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
