இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி சபைப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதிகளவான கடன் தொகை 2028ஆம் ஆண்டிலேயே செலுத்தப்பட வேண்டும் எனப் பலரும் கூறி வந்தாலும், 2025ஆம் ஆண்டில் 3900 மில்லியன் டொலர் கடன் தவணையைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், 2028ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய தொகை 3.2 மில்லியன் டொலர் மாத்திரமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 2100 மில்லியன் டொலர் முதல் 2200 மில்லியன் டொலர் வரை செலவிடப்பட்ட போதிலும், 1700 மில்லியன் டொலர் மேலதிக இருப்பை (Surplus) பதிவு செய்ய அரசாங்கம் முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 29,300 மில்லியன் டொலர் வருமானத்தில், 27,600 மில்லியன் டொலர் மாத்திரமே செலவிடப்பட்டமையினால் இவ்வாறானதொரு மேலதிக இருப்பை எட்ட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்
