நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் சைபர் ஊடுருவலாளர்கள் (Hackers) அத்துமீறி நுழைந்து முன்னெடுத்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 2026 ஜனவரி மாத காலப்பகுதியில், வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களின் போது அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான தகவல்களின் அடிப்படையில் இந்த மோசடி அம்பலமானது. இது குறித்து நிதி அமைச்சு உடனடியாக இலங்கை கணினி அவசர நிலைப் பிரிவு (SL-CERT) மற்றும் இலங்கை பொலிஸின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CCID) அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவிடமும் (FIU) இது தொடர்பான விபரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து அமைச்சினால் உள்வாரி விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், சில உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அதற்குத் தடையற்ற வகையில் மேலதிக தகவல்கள் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நாடுகளுடன் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைய, சர்வதேச ஒருங்கிணைப்புடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
