உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை அநியாயமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் (Writ) மனுவை இன்று (28) மீண்டும் அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு நேற்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் விரிவான விளக்கங்களை முன்வைத்தார்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டக் கருத்துகளைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
