மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற கலவரத்தால் ரூ.150 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கலவரத்தின் போது சிறைச்சாலையின் பல கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
கட்டிடங்களின் கூரையோடுகள் உடைக்கப்பட்டதுடன், கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 13 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கலவரத்தின் போது, கைதிகள் குறித்த தினத்தில் நள்ளிரவு வரை கற்களை வீசியதாகவும், சிறைச்சாலைக்கு அருகிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூஸா சிறைச்சாலை உள்ளிட்ட ஏழு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
4,100-க்கும் அதிகமான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் தொடங்கிய கலவரம், நேற்று காலை 6.00 மணியளவில் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒன்பது கைதிகள் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட போதைப்பொருள் தட்டுப்பாடே இந்த கலவரத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
