ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், “பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
சர்வதேச இஸ்லாமிய ஃபிக்ஹ் அகாடமியினால் (International Islamic Fiqh Academy) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், முஸ்லிம் உலக லீக் (MWL) அமைப்பின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான மேன்மைதங்கு ஷேக் டாக்டர் முகமது அல்-இசா கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அகாடமியின் தலைவர் ஷேக் டாக்டர் சாலிஹ் பின் ஹுமைத், பொதுச்செயலாளர் ஷேக் டாக்டர் குதுப் சானோ மற்றும் மூத்த முஃப்திகள், இஸ்லாமிய அறிஞர்கள் பலரின் முன்னிலையில் இந்த மாநாடு திறக்கப்பட்டு நடைபெறுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த தெளிவான வரையறையை உருவாக்குவது, அதற்கான இஸ்லாமிய வழிகாட்டுதல்களை நிர்ணயிப்பது, வன்முறையின் வடிவங்கள், காரணங்கள் மற்றும் விளைவுகளைக் கண்டறிவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட இஸ்லாமிய நூல்கள் மற்றும் போதனைகள் தொடர்பாக நிலவும் தவறான புரிதல்களைச் சரிசெய்வதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதிலும் கையாள்வதிலும் மதத் தலைவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
