நாட்டின் 7 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள 7 மாகாணங்களுக்கு உட்பட்ட 62 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கவனத்திற் கொள்ளப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இடங்களை அடையாளம் காண்பதற்காக விசேட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படும் இடங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நுளம்பு குடம்பிகள் பெருகும் விகிதத்தின் அடிப்படையில், தீவிரமாக நுளம்புகள் உருவாகும் 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேவேளை டெங்கு தொற்றினால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம் செப்டம்பர் மாதத்தின் கடந்த 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
