இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்பட மாட்டாது. அது தொடரும் என அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் தீவிரமான தாக்குதல்களை இஸ்ரேலிய வான் படையினர் நடத்தி வருவதாக சற்றுமுன்னர் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலால் காசாவின் வடக்கு முதல் தெற்கு வரையான பகுதிகள் அதிர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை கிடைத்துள்ள தகவல்களின் படி இன்றைய தாக்குதல்களில் குறைந்தபட்சம் 42 பலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் இன்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் காசாவில் இதுவரை மொத்தம் 192 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களுள் 58 பேர் சிறுவர்கள் 34 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
காசா பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக விசேட கூட்டமொன்றை கூட்டியது. ஆனால் இந்த கூட்டத்தில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு கூட்டு அறிக்கையையாவது வெளியிடும் அளவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இணக்கம் காணப்படவில்லை. அமெரிக்காவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இந்த விடயத்தில் ஒருமித்த கருத்துக்கு வருவதை தடுத்ததாக சீனா இப்போது குற்றம்சாட்டியுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் மற்றும் காசா பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற மோதல்கள் உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற
பலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.
கனடா ஒரு சுதந்திர நாடு அதில் வாழும் மக்கள் எந்த வகையிலும் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம் அவர்களுக்கு அதற்கான சுதந்திரம் இருக்கின்றது. அந்த சுதந்திரத்தை இருதரப்பினரும் மதித்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஏற்கனவே ஹமாஸ் இயக்கத்தால் காலி செய்யப்பட்ட கட்டிடங்கள் மீதும் அது கைவிட்ட பயிற்சி முகாம்கள் மீது நடத்தப்பட்டு வருவதாக பலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தங்களுடைய ஆயுதங்களும் தாக்குதல் இலக்குகளும் வேறு திசையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் இந்த முறை ஹமாஸிடம் இருந்து கடும் எதிர்ப்பை எதிர் நோக்கியுள்ளது. இஸ்ரேலின் பல நகரங்களை சமகாலத்தில் குறிவைத்து ஹமாஸ் ஏவுகணை மற்றும் ராக்கெட்டுகளால் தாக்கிய வண்ணம் உள்ளனர். இஸ்ரேலியர்களுக்கு இது ஒரு புது அனுபவம். இந்த அனுபவத்தால் அவர்கள் திகைத்துப் போயுள்ளனர். அது மட்டுமன்றி இன்றைய நிலையில் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் உயிருக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மத்திய கிழக்கின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இஸ்ரேல் மக்கள் இதுவரை பெரும் நம்பிக்கை வைத்திருந்த தமது படைகள் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கி உள்ளனர். காஸாவில் தாக்குதல் மற்றும் எதிர் தாக்குதல் இன்றும் தொடர்கின்றது.
Today’s protest for Palestine in #Montreal made me proud yall- pic.twitter.com/4lF0w9ewTp
— sarah (@intifadasarah) May 16, 2021