நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளையில் இருந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைவாக பிரதான ரயில் பாதைகளில் 06 ரயில்களும், கடலோர பாதையில் 04 ரயில்களும், களனி ரயிவே பாதையில் 04 ரயில்களும், புத்தளம் ரயில் பாதையில் 03 ரயில்களும் சேவையில் ஈடுப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்தில் இருந்து 3 ரயில்களும், மீரிகம ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயிலும் பிரதான பாதையில் சேவையில் ஈடுப்படும். இதேவேளை வேயாங்கொட ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயிலும், கம்பஹா ரயில் நிலையத்திலிருந்து ஒரு ரயிலும், கரையோர ரயில் பாதையில் அலுத்கமவில் இருந்து 04 ரயில்களும் சேவையில் ஈடுப்படவுள்ளன.
களனிவேலி ரயில் பாதையில் – அவிசாவலையில் இருந்து 02 ரயில்களும், பாதுக்கவில் இருந்து 02 ரயில்களும், சிலாபம் – கொச்சிக்கடை ரயில் நிலையத்தில் ஒரு ரயிலிலும், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் இருந்து 02 ரயில்களும் சேவையில் ஈடுப்படவுள்ளன.
மேலும், பிரதான ரயில் பாதையில் வேயாங்கொட மற்றும் மீரிகமவில் இருந்து வரும் 02 ரயில்களின் சேவைகள் பாணந்துறை வரை நீடிக்கப்படவுள்ளன.
கண்டியிலும் பொல்கஹவெல மற்றும் மஹவக்கிடையிலும் அனுராதபுரத்திலும் ரயில்களை சேவையில் ஈடுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.