கொரோனா உலகப் பொது நோயாகப் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். காரணம், இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் விகிதாசாரம் 30% தையும் தாண்டிக் கொண்டிருக்கிறது.
துறை சார்ந்த நிபுணர்கள் இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்:-
# முஸ்லிம் சமூகத்தவர்கள் திருமண மற்றும் ஜனாஸா வீடுகளில் அடிப்படையான சுகாதார விதிகளை கடைப்பிடிப்பதில் கவனயீனமாக உள்ளனர். எனவே இந்த நிலை இந்நோய் வேகமாக பரவ காரணமாக இருக்கிறது.
# குறிப்பாக இளைஞர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியே சென்று கொரோனா நோயை காவிக்கொண்டு வீட்டுகளுக்குள் வந்து தொற்றா நோய்களால் (Non Communicable Diseases) பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் அவற்றை பரப்புகின்ற நோய்க் காவிகளாக இருக்கின்றார்கள்.
# முஸ்லிம் சமூகத்தில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களது விகிதாசாரம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது அதிகமாக இருப்பது. குறிப்பாக சுவாச நோய்கள், இருதய நோய்கள், கென்சர், சிறுநீரக நோய்கள் போன்ற (NCD) தொற்றா நோய்களால் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஏற்கனவே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் இத்தகைய நோயாளிகளுக்கு கொரோனா இலகுவில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதனாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
# முஸ்லிம் சமூகத்தில் நோய்த்தொற்று சம்பந்தமான சில பிழையான நம்பிக்கைகள் இருப்பது நிலையை மேலும் மோசமடையச் செய்திருக்கிறது. அதாவது ‘களா கத்ர் ‘ பற்றியும் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் மருந்துகளைப் பாவித்தல் போன்றன தொடர்பாகவும் பிழையான நம்பிக்கைகள் நிலவுவது சிலர் அசிரத்தையாக இருப்பதற்கான காரணமாக இனம்காணப்பட்டிருக்கிறது.
எனவே குறிப்பாக முஸ்லிம் சமூகம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல்களில் முன்னெச்சரிக்கை
இது இப்படியிருக்க தற்போது வழிபாட்டு தலங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் பள்ளிவாயல்களுக்கு வருவோர் ஏற்கனவே தரப்பட்டிருக்கும் அடிப்படையான சுகாதார விதிகளை மிகக் கவனமாக பின்பற்றாத போது நிலைமை இன்னும் மோசமடையலாம். எனவே,
+ அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக வருகை தராமலிருப்பது,
+ வீட்டில் உளூச் செய்து விட்டு வருவது,
+ முகக் கவசத்தை உரிய முறையில் அணிந்து வருவது,
+ ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணுவது
+ பள்ளிவாயிலில் அதிக நேரத்தை கழிக்காமல் அங்கிருந்து வெளியேறுவது
+ கட்டித் தழுவுவதையும் கைகுலுக்குவதையும் தவிர்ப்பது
+ தமக்கு இருமல் தடுமல் காய்ச்சல் போன்ற கொரோனாவின் அறிகுறிகள் இருப்பதாக கருதுபவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பள்ளிவாசல்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்வது,என்பவற்றை கடுமையாக அனுசரித்துக் கொள்ள வேண்டும்.
தொற்றா நோய்கள் எனப்படும் கடுமையான நோய்களால் ஏற்கனவே பிடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா இலகுவில் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை இருப்பதனால் அவர்கள் பள்ளிவாயலுக்கு வருவதை தவிர்த்துக் கொள்வது அவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பாக அமையும்.
பள்ளிவாயல் நிர்வாகிகள் தமது பொறுப்பில் உள்ள பள்ளிவாயல்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாக செய்ய வேண்டும்.
பெருநாள் ஷொப்பிங், பயணங்கள்
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது என்பதன் அர்த்தம் மிகவுமே சுதந்திரமாக நடந்து கொள்ள முடியும் என்பதல்ல.
எதிர்வரும் பெருநாள் தினத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் கொரோனா பற்றிய பயமின்றி நடப்பது பேராபத்தை விளைவிக்கும்.
எனவே, அது தொடர்பாக பின்வரும் ஒழுங்குகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்:-
1. தற்போதைய சூழ்நிலையில் பெருநாள் ஷொப்பிங்கை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசியமாக அதனைச் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தால் ஊர்களில் உள்ள கடைகளுக்குப் போகலாம். தேவையானவர்கள் மட்டும் போகலாம்.சிறார்களை அழைத்துச் செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.சுகாதார விதிகளை உச்சமாகப் பின்பற்ற வேண்டும்.
2. பெருநாளைக்கான ஆடைகள், உணவுப் பண்டங்கள் என்பவற்றை வாங்குவதில் சிக்கனம் பேணப்படுவது அவசியம்.நாட்டில் பயங்கரமான வறுமை நிலவுவதை கவனத்தில் எடுத்து வீண்விரயத்தை தவிர்த்து தர்மங்கள் செய்ய வேண்டும்.
3. பெருநாள் தினத்திலோ அதன் பின்னரோ குடும்ப சந்திப்புகள், உல்லாசப் பயணங்கள் என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு ‘அவுருது பொகுர'(புத்தாண்டு கூட்டு) காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது ஏப்ரல் மாத சிங்கள,தமிழ் புத்தாண்டின் போது கட்டுப்பாடில்லாமல் மக்கள் நடந்து கொண்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதேபோல் ‘ஹஜ் பொகுர’ என்ற நிலை உருவாகி முஸ்லிம் சமூகத்திற்கு அவப்பெயர் வர நாம் காரணமாக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக.