மன்னார் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களின் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலிப் பிரதேச உறுப்பினர் P.M. முஜீபுர் றஹ்மான் வன்மையாக கண்டித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறே இவ்வார ஆரம்ப நாட்களில் மேலும் மூன்று சிற்றாலயங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இவைகளும் கண்டிக்கத்தக்கது என்றார்.
சுமார் 30 வருட யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மன்னார் மாவட்டம் முதன்மையாக உள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இங்கு கத்தோலிக்க, ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் சகவாழ்வோடும் வாழ்கிறார்கள்.
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் சகவாழ்வு என்பவற்றை விரும்பாத நாசகார சிந்தனை கொண்டவர்களே இவ்வாறான மனிதநேயமற்ற செயல்களைச் செய்துள்ளார்கள்.
இவ்வாறான செயல்களின் மூலம் சமூகளின் ஒற்றுமையை சிரழிக்க முயற்சிக்கும் நாசகார கும்பல்களை உடணடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.