தொகுப்பு:அஷ்ஷெய்க் S.H.M.பளீல்
ஹஜ்ஜுப் பெருநாள் குத்பாவுக்காக தயாராகும் உலமாக்களுக்கு பணிவான சில ஆலோசனைகள்.
உலமாக்கள் தமது குத்பாவில் துல்ஹஜ் மாதத்திற்கென்றே உரித்தான அம்சங்களையும் அதே நேரத்தில் நாம் இருக்கும் கால சூழலை கவனத்தில் கொண்ட அம்சங்களையும் கட்டாயமாக உள்ளடக்க வேண்டும்.
அந்த வகையில்:-
1. “அஷ்ஹுருல் ஹுரும்” எனப்படும் புனிதமான நான்கு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜாவில் நாம் இருப்பதாக சுருக்கமாக கூற வேண்டும்.
2. “அய்யாமுத் தஷ்ரீக்” எனப்படும் 11,12, 13 ஆகிய நாட்களை நாம் எதிர்நோக்கி இருப்பதால் அவை பற்றி ஹதீஸ்களில் வந்த குறிப்புக்களை ஞாபகமூட்ட வேண்டும். இந்த நாட்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் ஞாபகப்படுத்துவதற்கும் தக்பீர் முழங்குவதற்குமான நாட்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.
3. ஹஜ்ஜின் காரணகர்த்தாவாகவும் நடுநாயகமாகவும் இருக்கும் இப்ராஹிம் (அலை) அவர்களது வாழ்வின் முன்மாதிரிகள் பற்றிக் கூறலாம்.
انه كان امة .اتخذ الله ابراهيم خليلا. اتبعوا ملة ابيكم ابراهيم
அவர் ஒரு சமூகம், அவர் தான் எமக்கு முஸ்லிம்கள் என் பெயர் வைத்தார், அத்தஹியாத்தில் அவரை பல தடவை ஞாபகமூட்டுகிறோம்; ஸலவாத்துச் சொல்கிறோம். அவரது வாழ்க்கையை நாம் படிக்க வேண்டும். அவர் போன்று வாழ வேண்டும். அவரது ஈமானிய பலம், கொள்கைப் பற்று, குடும்ப வாழ்வு, பிள்ளை வளர்ப்பில் அன்னாரது முன்மாதிரி பற்றி எல்லாம் சொல்ல முடியும்.
4. குர்பான் கொடுப்பதன் சிறப்புகளைப் பற்றி சொல்லுகின்ற பொழுது பின்வரும் அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ. பள்ளிவாயலுக்கு வந்திருப்பவர்களில் ஏறத்தாள,பெரும்பாலும் 10% ஆனவர்கள் மாத்திரமே உழ்ஹிய்யா கொடுப்பதற்கான தகுதி உள்ளவர்களாக இருப்பதனால் அதனுடைய சிறப்புகளைப் பற்றி கூற அதிக நேரம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
ஆ. சிறுபான்மை நாட்டில் குர்பானி கொடுப்பவர்கள் எப்படி அதனை கொடுக்க வேண்டும் என்ற ஒழுங்குகளை அதிகமாக வலியுறுத்த வேண்டும்.
5. குத்பாவின் அரைப்பகுதி கொரோனாவின் ஆபத்தான நிலை பற்றியதாகவும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதன் அவசியம் பற்றியதாகவுமே அமையவேண்டும் .
அ. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 35 சதவீத மாணவர்கள் முஸ்லிம்கள்.
ஆ . ஏறத்தாள ஆயிரத்துக்கும் அதிகமான ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டன.
இவை பற்றி இன்னும் வலியுறுத்தி சொல்லி இந்த நோய் பற்றிய பாரதூரத்தை புரிய வைக்க வேண்டும்.
அ. முஸ்லிம்கள் தமது திருமண வீடுகள், ஜனாஸா வீடுகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடந்து கொண்டமையும் இளைஞர்கள் வெளியே யில் சென்று நோயை காவிக்கொண்டு வந்ததும் தான் இதற்கான பிரதான காரணங்கள் என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும்.
ஆ. பெருநாள் தினத்திலோ அதற்குப் பின்னரோ உல்லாசப் பயணங்களை முற்றாக தவிர்க்க வேண்டுமென்றும் உறவினர் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்றும் கட்டாயமாக போகவேண்டிய நிலை ஏற்பட்டால் சமூக இடைவெளியைப் பேணியும் மாஸ்க் அணிந்தும் போக வேண்டுமென்றும் அதிக நேரம் தாமதிக்காமல் அங்கிருந்து வெளிவர வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.
6. தற்போது உலகெங்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பேராபத்தில் இருந்து ஒவ்வொருவரையும் காத்துக் கொள்வதற்கு நாம் தற்காப்பு முயற்சிகளில் ஈடுபடுவதோடு இயன்றவரை அதிகமாக அல்லாஹ்வை நெருங்குவதற்கும் தான, தர்மங்களை செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.
7. யாரெல்லாம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் மனவருத்தத்தோடும் கவலையோடும் இருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும். இவ்வுலக வாழ்வு என்பது சோதனைக்கூடம் என்றும் உலக வாழ்வு சோதனைகளால் நிரம்பியது என்றும் பொறுமையாக இருப்பவர்களை அல்லாஹுத்தஆலா நேசிக்கின்றான் என்றும் ஞாபகமூட்ட வேண்டும். நேரத்துக்கு தொழுவது, குர்ஆன் ஓதுவது, மக்களுக்கு இயன்றவரை உதவுவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவது, போன்றவற்றை செய்வதோடு பாவங்களை முற்றுமுழுதாக தவிர்க்கும் படியும் இயன்றவரை சிக்கனமாக செலவுகளைச் செய்யும் படியும் நாம் ஞாபகமூட்ட வேண்டும். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு நபி யூஸுப்(அலை) போன்று திட்டமிட வேண்டும் என்றும் கூற வேண்டும்.
அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாத்து, அவனுடைய திருப்பொருத்தத்தை அடைந்தவர்களுக்கு கூட்டத்தில் சேர்ப்பானாக!