குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருதயவியல், நரம்பியல், நுரையீரல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்காக புதிய பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) ஆலோசனை வழங்கியுள்ளார்.
குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற குழு அறை 01இல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியசாலையில் புதிய பிரிவை ஆரம்பித்து பிரதேச நோயாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் குளியாபிட்டிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகள், தற்போதைய நிலை மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், குருநாகல் மாகாண வைத்தியசாலையை தேசிய அளவில் மேம்படுத்தப்பட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு தேவையான வைத்திய பிரிவு, சிறுவர் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை கொண்ட 14 மாடிகளை கொண்ட கட்டிடத் தொகுதியாக நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப ஒப்புதலை கோர இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்திற்கமைய சில மாதக் காலங்களுக்குள் இந்த கட்டிடத் தொகுதியின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.