போராட்டங்களினால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது என்று போலியான குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கம, ரோஹன திஸாநாயக்க, திலிப் வெத ஆராச்சி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் எவரும் போராட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. மக்களை மூடர்களாக்கும் கருத்துக்களை குறிப்பிடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் இன்று பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதன் காரணமாகவே வீதிக்கிறங்கி போராடுகிறார்கள். கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவல் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாடு எதிர்க் கொள்ளவுள்ள அபாயகரமான நிலையினை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலை தோற்றம் பெறும் என்பதை அரசாங்கத்திற்கு ஏற்கெனவே அறிவுறுத்தினோம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி அறிவுறுத்தல்களை நீக்க வேண்டும் என சுகாதார தரப்பினரும், வைத்திய சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
கட்டுப்பாடுகளை தளர்த்தினால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்கள். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமானதால் பலர் உயிரிழந்துள்ளார்கள்.
முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் அரசாங்கம் மூட நம்பிக்கையின் பக்கம் சென்றது. அக்காலக்கட்டத்தில் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் நாடு இன்று நெருக்கடியான நிலையை எதிர்க் கொண்டிருக்காது. இன்று வைத்தியசாலையின் சேவைகளில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் என்ன.
தேவையற்ற செயற்பாடுகளை விடுத்து நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் காலதாமதம் ஒவ்வொரு நொடி பொழுதும் ஒரு உயிரை பலியெடுக்கிறது. சர்வதேசத்தின் உதவியை பெற அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.
போராட்டங்களில் தான் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற விம்பத்தை அரசாங்கம் தோற்றுவிக்க முயற்சிக்கிறது. பல்வேறு நெருக்கடிகளை எதிர்க் கொண்டதால் தான் மக்கள் வீதிக்கிறங்கி போராடுகிறார்கள்.
உரப்பிரச்சினை, எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம், தடுப்பூசி பெறல், வாழ்க்கை செலவு உயர்வு மற்றும் ஆசிரியர்- அதிபர் வேதன பிரச்சினை , இலவச கல்வியை பாதிப்புக்குள்ளாக்கும் சட்டமூலம் ஆகியவற்றிற்கு தீர்வு வழங்கியிருந்தால் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் வீதிக்கிறங்கி போராடமாட்டார்கள்.
குளிர் அறைகளில் இருந்து பாதுகாப்பான முறையில் கருத்துரைப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சு நேரடி கண்காணிப்பு நடவடிக்கைகளை முனனெடுக்க வேண்டும்.
அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மரணங்களை வைரஸ் தொற்று மரணம் என கருத முடியாது. இதனை படுகொலை என்றே கருத வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிிவித்துள்ளார்.