19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள குறைகளை திருத்தி மீண்டும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ,20 ஆவது அரசியலமைப்பை உடனடியாக நீக்கவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தளை கிரேண்ட் மவுன்டன் ஹோட்டலில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனியொரு கட்சியால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது. அதனால் திருடர்களதும் ஊழல்வாதிகளதும் ஆதிக்கம் இல்லாத புதிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் விசாலமான புதிய அரசியல் கொள்கையொன்றை உருவாக்கி புதிய பயணத்துக்கு தலைமைத்துவம் வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது.அத்தோடு,
பிரதேச சபையிலிருந்து நாடாளுமன்றம் வரையில் சகல பிரிவுகளிலும் திருடர்களே இருக்கிறார்கள். பிரதேச சபையின் மணல் அனுமதிப் பத்திரத்தினூடாகவும் பணம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு சென்றதும் வியாபர நடவடிக்கைகளினூடாக விலைமனு கோரளினூடாகவும் பணம் உழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் ஒரேடியாக தூக்கி எறிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.