மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்று (06)நடைபெற்றது.இந்திய கிரிக்கெட் அணியின் ஆயிரமாவது ஒருநாள் ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தலைவர் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக ஆட்டக்காரராக இணைத்துக் கொள்ளப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்கள்.
சஹால், சுந்தர் சுழலில் சிக்கி இருப்பினும், பொறுப்பாக ஆடிய ஹோல்டர், 71 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வேகபந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, 176 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்திய அணி சார்பாக சஹால் நான்கு விக்கெட்டுகளையும் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இஷான் கிஷான் 28 ஓட்டங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 60 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். நடு வரிசையில் களமிறங்கிய விராத் கோலி (8), ரிஷப் பான்ட் (11) ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்கள். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சூர்யகுமார் 34, தீபக் ஹூடா 26 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் ஆயிரமாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது அசத்தல் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.