பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சுகாதாரத்துறை ஏதேனும் சுற்றறிக்கை வெளியிட்டாலோ அல்லது மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தாலோ, இது ஒரு தொற்றுநோய் நிலைமை என்பதை கருத்திற்கொண்டு நாங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த நிலைமை தொடர்பில் சுகாதார அமைச்சினால் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
‘அதன்படி, இவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கினால், நாங்கள் அதற்கு ஏற்றவாறு மாற வேண்டும்.’
இது தொடர்பில் தங்களுக்கு இதுவரை எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு தமக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்குள் தனியார் பேருந்து நடத்துனர்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் பயணிகளின் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்குமாறு அறிவுறுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.