ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் தொடர்ந்தும் பிரதி சபாநாயகராக செயற்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, தனது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்து விட்டதாகவும், இந்த முக்கியமான நேரத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில், தன்னை பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தான் பதவியில் நீடிப்பதாகவும், பிரதி சபாநாயகர் பதவிக்கான எந்த சலுகைகளையும் பெறமாட்டேன் என்ற நிபந்தனையின் பேரில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கும் அரசாங்கத்தின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதற்கும் எடுத்த தீர்மானத்தை அடுத்து ஏப்ரல் 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் தனது இராஜினாமாவை கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.