நாளைய தினம் ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோன்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா ஆடையை அணிந்து பரீட்சை எழுத அனுமதி வழங்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முகத்தை முழுமையாக மூடி பரீட்சையை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில பிரதேசங்களில் பர்தாவை அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசி கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் மண்டபத்துக்கு பிரவேசிக்க முன் தலையை மறைத்திருப்பவர்கள் தமது இரு காதுகளையும் திறந்து காட்ட வேண்டும், முகத்தை திறந்தே பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பர்தாவை அகற்றி பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் என வடக்கிலிருந்து சில பெற்றோர் முஸ்லிம் கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்திருந்ததாக முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.