எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (25ஆம் திகதி) மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்துகளின் சேவை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாகாணங்களுக்கிடையிலான சுமார் 3000 தனியார் பேருந்துகள் தமது நாளாந்த பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சுமார் 3200 மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், ஆனால் இன்று (25) சுமார் 300 பேருந்துகள் மட்டுமே இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக டீசல் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அந்த ஏற்பாடு வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான பஸ்களுக்கு டீசல் வழங்கும் முறையான வேலைத்திட்டத்தை இந்த வாரத்திற்குள் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் அனைத்து பஸ்களும் சேவையில் இருந்து விலகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மாகாண பஸ் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எனினும், நேற்றைய தினம் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.