60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையில் உள்ள வைத்தியர்கள் ஓய்வுபெறும் வரை அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்றுவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு அனைத்து மருத்துவர்களும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது 63 வயதை பூர்த்திசெய்துள்ள வைத்தியர்கள் மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வுபெற வேண்டும்.
அத்துடன், தற்போது 62 வயதை பூர்த்தி செய்துள்ளவர்கள் 63 வயதாகும்போதும், 61 வயதை பூர்த்திசெய்தவர்கள் 62 வயதாகும்போதும், 60 வயதை பூர்த்தி செய்தோர் 61 வயதாகும்போதும், 59 வயதை பூர்த்திசெய்தோர் 60 வயதாகும்போதும் புதிய வருடத்தில் ஓய்வுபெறவேண்டும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, குறித்த சேவைகால நீடிப்பு ஓராண்டில் முடிவடையும் எனவும், அதன் பின்னர் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் 60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், இவ்வருடத்தின் இறுதி நான்கு மாதங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இடைக்கால பாதீட்டுக்கமைய, அரச ஊழியர்களின் வயதெல்லை 65 இலிருந்து 60 ஆக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.