காஷ்மீர் கறுப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் இன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் சிந்தனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலங்கை வாழ் காஷ்மீர் நண்பர்கள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களைச் சித்தரிக்கும் ஆவணப்படங்கள் காண்பிக்கப்பட்டதோடு இது தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விஷேட செய்திகளும் அரங்கில் வாசிக்கப்பட்டன.
கருத்தரங்கில் அரசியல் செயற்பாட்டாளரும் முஸ்லிம் விவகார தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஷிராஸ் யூனுஸ் மற்றும் பாகிஸ்தானில் கல்வி கற்ற சுரையா ரிஸ்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
1947 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இந்திய அட்டூழியங்களையும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளால் அப்பாவி காஷ்மீர் மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்தும் இவர்கள் எடுத்துரைத்தனர்.
1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் திகதியன்று முறைகேடானதும் சட்டவிரோதமானதுமான அணுகல்கள் மூலமாக இந்தியா காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இதிலிருந்து இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் உலகின் மிகப் பெரும் சிறைச்சாலையாக மாறியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின் சிறப்பு அமர்வுகள் குறித்து பேசிய பேச்சாளர்கள், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அட்டூழியங்களை சர்வதேச சமூகம் இனி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர்.
பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற உமர் பாரூக் புர்கி உரையாற்றும் போது,
ஜம்மு, காஷ்மீரில் பல தசாப்தங்களாக நடந்து வரும் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நீதியான போராட்டத்திற்காக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தனது காணிக்கையை செலுத்தியதோடு காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையில் பாகிஸ்தானின் தார்மீக, அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் நோக்கத்தை தெளிவுபடுத்திய மேன்மைதங்கிய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, பாகிஸ்தானும் அதன் மக்களும் நமது காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் உள்ளத்தாலும் இதயத்தாலும் ஒன்றுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளின்படியும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலின் தீர்மானங்களின்படியும் காஷ்மீர் பிரச்சினையின் அமைதியான தீர்வுக்காக நாங்கள் எப்போதும் துணைநிற்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகளாவிய அரசியல் ஏற்றத்தாழ்வுகளும் போக்குகளும் எப்படி இருந்த போதிலும் காஷ்மீரிகளுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையும் அதனூடாக சுதந்திரமும் வழங்கப்படும் வரை காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இன்றும் என்றும் அரப்பணித்திருக்கும் எனவும் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற உமர் பாரூக் புர்கி மேலும் தெரிவித்தார்.