நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை சூத்திரத்தை குறிப்பிட்ட திகதியில் நடைமுறைப்படுத்துவதில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தும் திகதியை அறிவிப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.
குறிப்பிட்ட திகதிகளில் விலைச்சூத்திரத்தை அமுல்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் தெரிவித்ததன் பின்னர் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
இனிமேல் தட்டுப்பாடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படும் என நம்புவதாக பெற்றோலிய சங்கத்தின் இணை செயலாளர் கபில நாவுதுன்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.