துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று (ஞாயிறு) நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு வைத்ததாக இன்று (திங்கள்) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இஸ்தான்புலின் இஸ்டிக்லால் அவென்யூவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழ்ந்தனர். 81 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரம் பிரபலமான சுற்றுலா தலம். இந்நிலையில் இங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அதிபர் எர்டோகன் இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், நிகழ்விடத்தில் குண்டு வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குண்டுவெடிப்புக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து தாம் ‘ஆழ்ந்த வேதனையுடன்’ அறிந்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்த துருக்கியின் சகோதர மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தனர்.
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் “பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் துருக்கிய மக்களுக்கு தனது எண்ணங்களையும் ஆழ்ந்த இரங்கலையும்” தெரிவித்துள்ளார்.
“நேட்டோ எங்கள் நட்பு நாடான துருக்கியுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது,” என்று அவர் கூறினார்.
மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் தனது இரங்கலை டுவிட்டர் செய்தியில் பகிர்ந்துள்ளார்.
இஸ்திக்லால் தெருவில் நடந்த வெடி விபத்தில் பல உயிர்கள் பலியாகி காயம் அடைந்தனர் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் அறிந்து கொண்டேன்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நட்புறவான துருக்கிய மக்களின் வலி எங்களின் வலியாகும்” என அவர் மேலும் கூறினார்.