கிளைபோசேட் தடை நீக்கம் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சிறுநீரக நோய்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிளைபோசேட் களைக்கொல்லி தடைசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணம் கிளைபோசேட் என இதுவரை எந்தவொரு பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
அதிக சிறுநீரக நோயாளர்கள் பதிவாகும் வடமத்திய மாகாணம் உட்பட ஏனைய பிரதேசங்களில் இந்த தடையை நீக்காமல் இருக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, குறித்த பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலிக்க முடியும் என தெரிவித்தார்.
இதேவேளை கிளைபோசேட் மீது அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.
விவசாய பிரதிநிதிகள், விவசாய நிபுணர்கள், வேளாண் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடை அடுத்து கிளைபோசேட் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.