நாட்டில் உள்ள பெரும்பாலான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட தேசிய சபைக்கு இன்னும் சில நாட்களில் சமர்ப்பிக்கப்பட்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் என தேசிய சபை உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல்கள் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை சுமார் 70 சதவீதம் வரை குறைத்துள்ளதாக துணைக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக ஊடக நிறுவனங்களும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஊடகவியலாளர்கள் குழு ஒன்று குழுவிடம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு கடந்த 15ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழு இந்தக் குழுவின் முன் அழைக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்கள் வருவது குறைந்துள்ளதாகவும், தற்போதைய பொருளாதாரத்தில் நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் தெரியவந்தது.
அதேநேரம் காகிதத் தட்டுப்பாடு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் நாளிதழ் உள்ளிட்ட வெளியீட்டுத் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலைமையினால் நாளிதழ்களின் பக்கங்களை மட்டுப்படுத்தவும், நாளிதழ்களின் விலையை அதிகரிக்கவும் நேரிட்டதாகத் தெரிவித்த அவர்கள், பத்திரிகைகளின் அச்சிடுதல் 60 தொடக்கம் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.