சென்னை மக்களாலும், இலக்கியவாதிகளாலும் கொண்டாடப்பட்ட சென்னை புத்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA அரங்கில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.
கடந்த 6-ம் திகதி தொடங்கிய இந்தக் கண்காட்சியில் ஆயிரம் அரங்குகள், லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
தினமும் பல்வேறு பதிப்பகங்களிலும் முன்னணி எழுத்தாளர்கள் அமர்ந்து கையெழுத்திட்ட பிரதிகளை வழங்குவதும், வாசகர்களைச் சந்திப்பதுமாக இலக்கிய மனம் கமழ்ந்தது.
கடந்த ஆண்டில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனையாகின.
கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டபின் நடைபெற்ற, நடப்பாண்டின் புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை காட்டிலும் ஏராளமான வாசகர்கள் குவிந்தனர்.
இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு சார்பிலான சர்வதேச புத்தக கண்காட்சியும் ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் நடப்பாண்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர்.
இந்நிலையில் புத்தகக் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இந்நிகழ்வில் பதிப்பகத் துறையில் தடம் பதித்தவர்கள், புத்தகக் காட்சி சிறப்புடன் நடக்க துணைபுரிந்தோரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.
புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் இன்று அதிகளவில் கூட்டம் இருக்கும் என்பதால் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.