அண்மையில் வபாத்தான பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா அவர்களின் மாமியார் மர்ஹூமா ஹாஜியானி மாரியதுல் கிப்தியாவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சர்வமதத் தலைவர்களான கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் ஆகியோர் பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் அல்-ஹாஜ் ஸெய்யத் ஸாலிம் றிபாய் மௌலானா வின் இல்லத்துக்கு சென்று அவர்களை சந்தித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
மர்ஹுமா ஹாஜியானி மாரியதுல் கிப்தியா இலங்கை ஜனாஸா சேவைகள் சங்கத்தின் இஸ்தாபகத் தலைவரும், சர்வதேச முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் இஸ்தாபகத் தலைவருமான மர்ஹும் அல்-ஹாஜ் அஷ்ரப் ஹுசைனின் மனைவியும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மர்ஹும் அல்-ஹாஜ் எம்.எச்.முஹம்மதின் சகோதரியுமாவார்.
அன்னார் சமய சமூக சகவாழ்வு மற்றும் சமயத் தலைவர்களை மதிக்கும் பெண்மணியாகவும், சமூக சேவைகளை மிகவும் ஆவலுடன் செய்யக்கூடியவராகவும், இலங்கை ஜனாஸா சேவைகள் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தனது கணவருக்கு பரிபூரணமாக ஒத்துழைப்புக்களை வழங்கியவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய கால சூழ்நிலையில் இவ்வாறான பெண்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏக இறைவன் அன்னாருக்கு உயரிய சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்.