இலங்கை மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் மின் கட்டணத் திருத்தத்தைக் கோரி விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு மின்சார சபையின் பொது முகாமையாளர் கடிதம் ஊடாக இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
இதன்படி, “மின்கட்டண குறைப்பு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் காரணமாக இவ்வருடம் மின்சார சபையின் வருமானம் சுமார் 3,300 கோடி ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வருடம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போது 4,500 ஜிகாவோட் நீர் மின்சாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வறட்சியான காலநிலை காரணமாக 1,738 ஜிகாவோட் மின்சாரத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
வறட்சி நிலை காரணமாக எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி அதிகரிக்கலாம், இவ்வாறான நிலையில் மின்சார சபையின் செலவினங்களை ஈடுசெய்வது பாரிய பிரச்சினை” என மின்சார சபையின் பொது முகாமையாளர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரம், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும்.
எவ்வாறாயினும், இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.