பிச்சை எடுக்கும் வியாபாரத்திற்கு பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது அவர் தெரிவித்தார்.
அதன்படி, பொலிஸ், உள்ளூர் அமைப்புகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தைகளை பிச்சை எடுக்க கூலிக்கு அமர்த்துவது, சில குழந்தைகளை போதை மருந்து கொடுத்து பிச்சை எடுக்க வைப்பது, பெண்கள் கர்ப்பமாக இருப்பது போல் பிச்சை எடுக்க வைப்பது ஒரு தொழிலாக மாறிவிட்டது என இங்கு விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தாலும், நடைமுறை மட்டத்தில் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.