சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை நாம் எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் சனாதனத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும்; டெங்கு, மலேரியா, கொலரா போல ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுதான் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக மக்கள் செய்தித் தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி பகிர்ந்து கொள்கிறார்.
பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்ணினத்திற்கு எதிரான ‘சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்’
சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை ‘சனாதனம் என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகள்தான் அனைவருடைய கொள்கையாகவும் இருக்க வேண்டும். அனைத்து சாதியினரும் பெரிய இடத்துக்கு செல்ல முடியும் என்கிற நிலையை உருவாக்க வித்திட்டது நீதிக்கட்சி தான்.
அந்த எரிச்சல் சனாதனிகளுக்கு எப்போதுமே இருக்கும். உண்மையான வறுமை ஒழிப்பு என்பது தமிழ்நாட்டில் தான் நடந்து வருகிறது.
பெண்ணின் கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது தமிழ்நாடு. பள்ளி செல்லும் குழந்தைகளின் பசியாற்ற காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு. மக்களின் வாழ்வை நாம் சிறப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு செய்யும் அனைத்தும் வாய்ஜாலம் தான்.
சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருக்கும் விஸ்வகர்மா திட்டம் தான் இவர்கள் சனாதனத்தை ஒழிக்கவே மாட்டார்கள் என்பதற்கான சான்று. குழந்தைகளைப் படிக்க விடாமல் வேலை செய்ய ஊக்குவிக்கிறது இந்தத் திட்டம்.
இந்தியாவை மாற்ற வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு சொன்னார் மோடி. அதைப் பலரும் நம்பினோம். ஆனால் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவதைத் தான் அவர் அப்படிச் சொன்னார் என்பது இப்போதுதான் புரிகிறது.
அண்ணாமலையின் பேச்சுக்கள் எதுவும் எடுபடவில்லை. ஆடுகளை ஒழுங்காக மேய்க்கும் வேலையையாவது அண்ணாமலை செய்ய வேண்டும்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்…