ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி நேற்று (13) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனையடுத்து மழைக்காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Rizwan ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 86 ஓட்டங்களை பெற்றதுடன் Abdullah Shafique 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் மதீஷ பத்திரன 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
253 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 42 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 91 ஓட்டங்களையும் சரித் அசலங்கா 49 ஓட்டங்களையும் , சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியினை அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.