மாலைத்தீவில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற கோஷத்துடன் ஆட்சி செய்த இப்ராஹிம் முஹம்மது ஸாலிஹைத் தோற்கடித்த கலாநிதி முஹம்மத் முயீஸ் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
அதுவரை தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் ஸாலிஹ் பதவியில் இருப்பார்.
2018 முதல் மாலைதீவின் ஜனாதிபதியாக உள்ள 61 வயது இப்ராஹிம் ஸாலிஹ், தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் வலுவான உறவைப் பேணி வந்தார்.
தற்போது வெற்றிபெற்றுள்ள தலைநகர் மாலேயின் மேயர் 45 வயதான முஹம்மத் முயீஸ், தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா அவுட், இந்தியா வெளியேறு எனும் கோஷத்தைக் கொண்டிருந்தார். இவருக்கு மாலைதீவு மக்களில் 54 வீதமானோர் வாக்களித்திருக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி இப்ராஹீம் ஸாலிக்கு முன்னர் பதவியில் இருந்த முற்போக்குக் கட்சியின் அப்துல்லாஹ் யமீன், சீனாவுக்கான பலமான ஆதரவாளராக இருந்தார்.
இந்த நிலையில் இந்திய சார்பு தற்போதைய அரசு அவர் தேர்தலில் குதிக்க முடியாதவாறு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவரைச் சிறையில் அடைத்த போதும் உடனடி வேட்பாளராக களத்தில் குதித்த முஹம்மத் முயீஸ் முற்போக்குக் கட்சியின் (பிபிஎம்) சார்பில் வெற்றியடைந்திருக்கிறார்.
இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முயீஸ், யமீனின் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது மாலேயை மற்றுமொரு தீவிலுள்ள சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் 200 மில்லியன் டொலர் பாலத்தை சீனாவின் நிதியில் நிர்மாணித்தார்.
சீனாவிடமிருந்து மாலைதீவு ஒரு பில்லியன் டொலர் அளவில் கடன் பெற்றுள்ளது. 2016 இல் அதன் தீவுகளில் ஒன்றை சீனாவுக்கு 50 வருட குத்தகைக்கு வழங்கியும் இருக்கிறது.
இதற்கு இணையாக இந்தியாவும் கடந்த சில வருடங்களில் மாலைதீவுக்கு இரண்டு பில்லியன் டொலர் அளவில் கடன் வழங்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் தமது கடற்படை இருப்பை வலுப்படுத்த இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு வருகின்றன.
வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மாலைத்தீவு வழியாகவே செல்கிறது. இதனால் இலங்கையைப் போன்றே மாலைதீவும் சீனாவுக்கு முக்கியமானது.