இஸ்ரேல் – பலஸ்தீன மோதலின் போது நேற்று காணாமல் போனதாக கூறப்படும் பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவின் கீழ் வெளிநாடு சென்றுள்ளார்.
கம்பஹாவைச் சேர்ந்த 49 வயதான இவர் இஸ்ரேலுக்கு தாதியாக சென்றுள்ளார்.
இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.