அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளைன்பீல்ட் நகரத்தில் அமெரிக்கர் ஒருவரின் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி 6 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டான்.
71 வயதான இந்த அமெரிக்கர் தனது வீட்டில் குடியிருந்தவர்களின் கதவைத் தட்டித் திறக்கச் செய்து தாயையும் மகனையும் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இந்த முஸ்லிம்கள் சாகத்தான் வேண்டும் என தனது கையில் இருந்த 7 அங்குல கத்தியால் குத்தியதில் 32 வயதான தாய் பல இடங்களில் காயங்களுக்கு உள்ளானார்.
அவரது 6 வயது மகன் வாதியா அல் பயோமி 26 இடங்களில் குத்தப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பலஸ்தீன – அமெரிக்கர்களான இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே கொல்லப்பட்டார்கள் எனவும் இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலினால் உந்தப்பட்டே இந்தக் கொலையைச் செய்திருப்பதாகவும் தமது விசாரணைகளின் போது தெரியவந்ததாக மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) தெரிவிக்கையில், அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இஸ்லாமிய வெறுப்பையும் பலஸ்தீனர்களுக்கு எதிரான இனவாதத்தையும் பரப்புவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
சிறுவனின் கொலையைக் கண்டித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தத் தாக்குதலால் நானும் முதற்பெண்மணியும் அதிர்ச்சியடைந்தோம்.
அமெரிக்கர்கள் என்ற வகையில் நாம் இஸ்லாமோபோபியா மற்றும் அனைத்து வகையான மதவெறிகளையும் வெறுப்புக்களையும் நாமனைவரும் இணைந்து நிராகரிக்க வேண்டும். வெறுப்புக்களுக்கு முன்னால் நான் அமைதியாக இருக்க மாட்டேன் எனப் பலமுறை சொல்லிவிட்டேன் எனத் தெரிவித்தார்.