கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை அப்பதவியில் இருந்து நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வார இதழ் பத்திரிகையில், மாகாண ஆளுநர்கள் பலரை இடமாற்றம் செய்ய ரணில் அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்மூலம் அண்மையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவி வகிக்கும் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநராகவும், தற்போதைய ஊவா மாகாண ஆளு நரான ஏ.ஜே.எம். முஸம்மில் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் அனைத்தையும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என குறித்த சிங்கள வார இதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.