‘போர் நிறுத்தம் வேண்டாம்: பைடன் திட்டவட்டம்

Date:

கடந்த அக்டோபர் 7 அன்று பலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.

இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழியாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரான், ஈராக், சவூதி அரேபியா, ஏமன், லெபனான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதன் காரணமாக போரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு பல உலக நாடுகளும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஆனால், இஸ்ரேல் அக்கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடைநிறுத்தம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

போர் நிறுத்தம் வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத சித்தாந்தத்தை கடைபிடித்து வருவதை நிறுத்தாத வரையில் போர் இடைநிறுத்தம் என்பது அமைதிக்கான வழியாக இருக்காது.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஒவ்வொரு போர் இடைநிறுத்த காலமும் தங்கள் ராணுவ தளவாட தளவாடங்களையும், பயங்கரவாத திட்டங்களுக்கான ஆயுதங்களையும் சேகரித்து வைத்து கொள்ளும் காலமாக உள்ளது.

தங்கள் அமைப்பின் பயங்கரவாதிகளை பலம் பெற செய்து மீண்டு அப்பாவிகளை கொல்ல தொடங்குவார்கள்.

தற்காலிகமாக போரை நிறுத்துவது நமது நோக்கமாக இருக்க கூடாது; நிரந்தரமாக பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நோக்கமாக இருக்க வேண்டும்; தொடர்ந்து நடைபெறும் வன்முறைக்கு ஒரு முடிவு வர வேண்டும். அத்துடன் வரலாற்று தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேலும் மனிதாபிமான சட்டங்களை மதித்து, பொதுமக்களின் உயிரிழப்பை குறைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மனதில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பதிலடி கொடுக்க வேண்டிய கோபத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி தவறுகள் நடக்காமல் இஸ்ரேல் பார்த்து கொள்ள வேண்டும்.

போர் நிறைவடைந்ததும், பலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவதுதான் இந்த சிக்கலுக்கு தீர்வு. இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார் 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...