இலங்கை சிறார்களை மலேசியா வழியாக வேறு நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் முதலில் சட்ட ரீதியாக மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, போலி கடவூச்சீட்டு தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 13 சிறார்கள் இதுவரை மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.