தங்கொவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகஸ்மங்கட அல்கம வீதியில் அமைந்துள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் இரவு நேரங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
இன்று (28) காலை நிலவரப்படி, தீயினால் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
திடீரென தீ பரவியதையடுத்து கம்பஹா மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும் வட்டுபிட்டிவல முதலீட்டு வலயத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும் கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் தீயை கட்டுப்படுத்துவதற்கு அனுப்பப்பட்டன.
அத்துடன், தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தங்கொவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.