ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதை கண்டித்து ஹெப்ரான் நகரிலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரியை இஸ்ரேல் இராணுவம் கொலை செய்ததாக தெரிவித்து மேற்கு கரை ஹெப்ரான் நகரிலும், ரமலா நகரிலும் பலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
“துணைத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து தங்களது தலைவர்கள் மேலும் தீவிரமாக போராடுவார்கள்.
சலே அல் அரூரி என்ற ஒரு நபர் இறந்ததற்கு பத்து இலட்சம் அரூரிகள் தோன்றுவார்கள்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இக்கொலை இஸ்ரேலின் கோழைத்தனமான செயல் என்று ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எமது மக்களின் விருப்பத்தையும் உறுதியையும் உடைப்பதில் அல்லது அவர்களின் தைரியத்தை இல்லாதொழிக்கும் செயல்பாடு வெற்றியடையாது எனவும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.