2023 ஆம் ஆண்டில் 13.5 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உம்ரா யாத்திரையை மேற்கொண்டதாக சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட அல்-அரேபிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு உம்ரா யாத்திரையை அதிகளவான சர்வதேச யாத்ரீகர்கள் மேற்கொண்டதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதன் முந்தைய ஆண்டை விட (2022) மொத்தம் 5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உம்ரா என்பது சவூதி அரேபியாவில் உள்ள மாக்காவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாகும்.
இது குறிப்பிட்ட திகதிகளைக் கொண்ட ஹஜ் யாத்திரையினை போலன்றி, ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.