இந்து கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்க வேண்டும்.
அயோத்தி போல் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என இந்துக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வறிக்கை குறித்த முக்கிய விஷயத்தையும் அவர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதியில் இந்து சிலைகளை வழிபட ஆண்டு முழுவதும் அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து ஞானபாவி மசூதி விவகாரம் பூதாகரமானது.
இதற்கிடையே நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்காக இந்திய தொல்லியல் துறை சார்பில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவின் ஆய்வுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஆய்வு செய்ய தடைக்கோரி மசூதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனாலும் நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கையை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது.
அதில் இடம்பெற்றிருந்த தகவல்களை நீதிமன்றம் கசியவிடாமல் பாதுகாத்தது. இதற்கிடையே தான் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைக்காக அறிக்கை இந்து மற்றும் மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் இதற்கு முன்பு பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அறிவியல் முறையிலான ஆய்வில் பழங்கால கட்டடத்தில் எச்சங்கள், கலை, சிற்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தூண்கள், சுவர்களில் இந்து மதம்சார்ந்த சிற்பங்கள், பறவைகள் உள்ளன. மசூதி கட்டும்போது அந்த தூண்கள், சுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்போது அதில் இருந்த சிற்பங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி வழக்கில் இந்த அறிக்கை என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் அயோத்தி போல் அடுத்தக்கட்ட நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும் என இந்துக்கள் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது,
ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் இதற்கு முன்பு கோவில் இருந்துள்ளதாக இந்திய தொல்லிய துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த இடத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி சிறப்பு சட்டம் இயற்றி இந்த இடம் முழுவதையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அயோத்தியில் (அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை) உள்ளதை போல் அறக்கட்டளை இங்கும் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் இந்துக்கள் வழிபாட்டை தொடங்க முடியும்” என்றார்.